Map of Tamilnadu

Saturday, April 28, 2012

அன்பார்ந்த தொ நி 4 மாணவர்களே..

நீண்ட நாட்களுக்குப் பிறகு நான் இங்கு உங்களை மீண்டும் சந்திக்கிறேன்!
உங்களுக்கு இன்னும் சில நாட்களில் தமிழ்க்கட்டுரைத் தேர்வு வந்துவிடும் அல்லவா??

அதற்காக இன்று நான் ஒரு சில கருத்துக்களைப் போடுகிறேன். நீங்கள் அவற்றைப் பார்த்து -  படித்து,  ஏதாவது கருத்து அல்லது கேள்விகள் இருந்தால் கேட்கலாம்.

இப்போது கீழ்க்காணும் படத்தொடரைக்காணுங்கள் :

இப்போது படத்தொடரை நன்றாப் பார்த்துவிட்டீர்களா?

என்னென்ன தெரிகிறது?

A. முதல் படத்தில் ஒரு சிறுவன் வருகிறான், மாணவன்  போல  தெரிகிறது. 

எப்படி மாணவன் என்று தெரிகிறது?

அவன் ஆடையைப் பாருங்கள். சட்டையை கால் சட்டையினுள் செருகி இருக்கிறான்.
சாதாரணமாக ஒரு சிறுவன் வெளியில் சென்றால் பெரும்பாலும் ஒரு 

டி-சட்டையை கால் சட்டையினுள்  செருகாமல்  செல்வதுதான்  வழக்கமாக  இருக்கும். சரிதானே ?

தரையில் பத்து வெள்ளியை பார்க்கிறான்.  அவன் முகபாவனையில் இருந்து அவனுக்கு ஆச்சரியம், சந்தேகம் போன்ற உணர்ச்சிகள் தெரிகின்றன, அல்லவா?

அவன் என்ன செய்யலாம் என்ற ஒரு சிந்தனையில் இருக்கிறான் என்றும் தெரிகிறது.

இந்தப் படத்திற்காக எந்த மாதிரியான இனியத் தொடரையோ,  அழகிய  வாக்கியத்தையோ பயன்படுத்தலாம் என்று சிந்தித்துப் பாருங்கள்.
ஒரு கட்டுரையின் தொடக்கத்தில் அந்தச் சம்பவம் நடந்த நாளில் இயற்கை எப்படி இருந்தது என்று கூறினால், உங்கள் கட்டுரையைப் படித்துப் பார்க்கும் மக்களுக்கு உங்கள் கட்டுரையில் எந்த மாதிரி சூழ்நிலைகள் இருக்கும் என்றும், என்னென்ன நிகழ்ச்சிகள் நடக்கலாம் என்றும் ஓர் எதிர்பார்ப்போடு படிப்பார்கள்.

இந்தக் கட்டுரையில்,  பள்ளியில்  ஓர் இனிய  நாளாக  இருக்கிறது.   அது  காலையோ, மதியமோ,  ஒய்வு  நேரமாகவோ,  பள்ளி  இடைவேளை  நேரமாகவோ இருக்கலாம்.

So... What do you think the weather is going to be like in your composition ? ? I mean.. what do you see or THINK you see or WANT to see in the first picture ? ? :)

காற்று அடிக்கிறதா ?

இதமான தென்றல் வீசுகிறதா ?
அதனால் மரம் செடி கோடி எல்லாம் அசைகின்றனவா ?

இல்லை - முற்றிலும் மாறாக பயங்கர வெயில் அடிக்கிறதா ?

" மொட்டை வெயில் மண்டையைப் பிளக்கும் நேரமா " ? ?


B.  இப்போது  இரண்டாவது  படத்தைப்  பாருங்கள்.  சிறுவன்  ஓர்  ஆடவரிடம்  சென்று  பணத்தைக்  கொடுக்கிறான்.  விளக்கம்  கொடுக்கிறான்.  


அவன்  பணத்தை  எங்கே  கண்டான், ( School Field, Eco-Garden?? )  சுற்றுமுற்றும்  கண்டு  எங்கும்  யாரையும் காணவில்லை,  அந்த  ஆடவர்  கேட்டுக்கொண்டிருக்கிறார் என்றும் தெரிகிறது.

சரி அந்த ஆடவர் யாராக இருக்கக்கூடும்?

பள்ளி ஆசிரியர் - அங்கு பள்ளி இடைவேளையின் போது அந்த வழியாக நடந்து வந்தவரா?

பள்ளியில் உள்ள பள்ளி அலுவலகத்தில் ( School General Office) வேலை பார்க்கும் அலுவலகரா ( Office Staff -  Administration Clerk, Admin Manager) ?

பள்ளி கட்டொழுங்கு ஆசிரியரா ( School Discipline Master )?

அல்லது உங்கள் பள்ளி தமிழ் ஆசிரியர்களில் ஒருவரா?


C. அந்த நேரத்தில் சிறுவனின் நண்பனாகவோ, வகுப்பு  மாணவனாகவோ  இருக்கலாம்.

அவன் முகபாவனை எப்படி இருக்கிறது? பதற்றம்? பயம்? இங்கு படத்திற்காக 
எந்த மாதிரியான இனியத் தொடரையோ,  அழகிய  வாக்கியத்தையோ  பயன்படுத்தலாம் என்று யோசித்துப் பாருங்கள்.

அவன் ஓடி வந்து ஆசிரியரிடம் என்ன சொல்கிறான் அல்லது கேட்கிறான்  என்று நினைக்கிறீர்கள்?  

அந்த இரண்டாவது சிறுவனின் சூழ்நிலையைச்  சற்று பரிதாபத்திற்குறியது போல நீங்கள் எழுதினீர்கள் என்றால் அவன் மேல் கதையைப் படிப்பவர்கள் அனுதாபம்படும் ( Sympathy, Empathy - அந்தச் சிறுவன் பாவம் என்ற ஓர் உணர்ச்சி ) வண்ணம் கதை அமையும்.

அவன் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வைத்த பணமா?

அவன் வீட்டில் பண நெருக்கடியா? அதனால் அவன் பெற்றோர்
அவனுக்கு மிகவும் யோசித்து கொடுத்த பணமா அது?

பணம் தொலைந்து விட்டது என்று தெரிந்தால் அவன் பெற்றோர் என்ன செய்வார்கள்? அவர்களுக்கு எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? இனி அவனுக்குப் பணம் கொடுப்பார்கள் என்று நினைக்கிறீர்களா?

பணம் தொலைத்தவனின் நிலையை கேட்ட சிறுவனுக்கும் ஆடவருக்கும் என்ன மனநிலை உண்டாயிருக்கும் என்று நினைக்கிறீர்கள்? ( பரிதாபப்பட்டிருப்பார்கள், மனம் நெகிழ்ந்திருப்பார்கள் )


D. அப்போது ஆடவர் அந்தச் சிறுவனிடம் என்ன சொல்கிறார் என்று நினைக்கிறீர்கள்?

அப்போது பணம் எடுத்தவனுக்கு எப்படி இருக்கிறது என்று நினைக்கிறீர்கள்?

ஆடவர் என்ன செய்வார் அல்லது சொல்வார் என்று நினைக்கிறீர்கள் ?

பணம் தொலைத்தவனுக்கு மனநிலை எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? இறுதியில்  என்ன நடந்திருக்கலாம்?

* நிச்சயம் பணம் தொலைத்தவன் பணம் கண்டெடுத்தவனிடம் நன்றி கூறியிருப்பான்.

* ஆடவர் பணம் தொலைத்தவனிடம் மேலும் கவனமாக இருக்கக் கூறியிருப்பார்.

* ஆடவர் பணம் கொண்டுவந்தவனிடம் நன்றி கூறி பாராட்டி இருப்பார்.

* இரு சிறுவர்களும் மேலும் நெருங்கிய நண்பர்களாகியிருக்க வாய்ப்பு உண்டு.


முக்கியமான ஒரு குறிப்பு : 

* நீங்கள் கதையில் வரும் ஆட்கள் பேசுகிறார்கள் என்று  காட்டவே  தேவை  இல்லை.

----- என்று கூறினான்.
---- என்று மொழிந்தான்.
---- என்று செப்பினான்.
---- என்று கேட்டான்.
----- என்று  வினவினான். 

 இவ்வாறு விளக்கம் கொடுத்து நீங்கள் எழுதினாலேயே போதுமானது. 

நீங்கள் பேச்சுத் தொடர் எழுதுகிறேன் என்று சொல்லி எழுத ஆரம்பித்தீர்கள் என்றால் முற்றுப்புள்ளி எங்கே வைப்பது, மேற்கோள் புள்ளிகள் எங்கே வைப்பது என்ற விஷயங்கள் தெரியாமல் பிழைகள் செய்வதற்கு வாய்ப்பு இருக்கும்.


சரி... இப்போது ஒரு கட்டுரையைச் சரிவர எழுதுவது எப்படி என்று தெரிந்ததா? உங்களுக்குக் கேள்வி இருந்தால் நாளை என்னிடம் நீங்கள் கேட்கலாம்.

கீழே நான் இன்னுமொரு இடுகையைச் சுட்டிக்காட்டி இருக்கிறேன். அதையும் நீங்கள் பார்த்துப் பயன்பெறலாம். ஆனால், அது உங்கள் போது அறிவுக்கு மட்டும்தான். (extra reading - if you want to...) :)


http://cckpstamil.blogspot.com/2011_06_01_archive.html

No comments:

Post a Comment