Map of Tamilnadu

Wednesday, May 18, 2011

PSLE Book Situational Compo #5

மரியாதை என்பது நாம் கொடுத்து மீண்டும் பெற வேண்டிய ஒன்றாகும்!  சில ஆண்டுகளுக்கு முன்பு என் குணம் மிகவும் மாறுபட்ட ஒன்றாக இருந்தது. ஆனால் இன்றோ நான் முற்றிலும் மாறிய சிறுவனாக இருக்கிறேன். அதற்குக் காரணம் என் பள்ளிக்குப் புதிதாக வந்திருந்த தமிழ் ஆசிரியரே காரணம் என்று கூறினால் அது மிகையாகாது!

அப்போது நான் ஐந்தாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன். பள்ளி முடிந்து நான் பேருந்துக்காகப் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தேன். அப்போது சேலை அணிந்து இருந்த ஒரு மாதும் அங்கு நின்று கொண்டிருந்தார். நான் என் நண்பர்களுடன் சேர்ந்து மிகவும் சத்தமாக ஆரவாரம் செய்து கொண்டிருந்தேன். அப்போது அந்த மாது என்னிடம் வந்து, " தம்பி, நான் ரயில் நிலையத்திற்கு செல்ல வேண்டும். இங்கிருந்து எந்த பேருந்தை எடுக்கலாம்? " என்று வினவினார். நான் சலித்துக்கொண்டே, " எண் 300 எடுங்க! " என்று கூறி முகத்தைத் திருப்பிக்கொண்டேன். அவர் மீண்டும் என்னைப் பார்த்து, " தம்பி, பொது இடத்தில் இவ்வளவு சத்தம் போடுவது சரியா? " என்று அன்புடன் கேட்டார். அதற்கோ நான், " நாங்கள் சத்தம் போடுவதைக் கேட்க நீங்கள் யார்? பிடிக்கவில்லை என்றால் நீங்கள் காதுகளை அடைத்துக் கொள்ளுங்கள்! " என்று சற்றும் மரியாதை இல்லாமல் கத்தினேன்.

" மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து " என்பதற்கு தகுந்தவாறு அந்த மாதின் முகமும் வாடியது. அப்போது அந்தச் சம்பவம் எனக்கு துச்சமாக இருந்தது.

அடுத்த திங்களன்று நான் மிகவும் உற்சாகத்துடன் பள்ளிக்குச் சென்றேன். அன்று எங்களுக்கு ஒரு புதிய தமிழ் ஆசிரியர் வரவிருந்தார். அவரைக் காண நான் மிகவும் ஆவலாக இருந்தேன். தமிழ் வகுப்பிற்கு சென்ற பொது நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். கடந்த வாரம் பேருந்து நிறுத்தத்தில் நான் அவமதித்த அதே மாது தான் எனது புதிய ஆசிரியராக வகுப்பில் நின்று கொண்டிருந்தார். அவரைக் கண்ட எனக்குக் கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை! நான் செய்வதறியாது வகுப்பின் வாசலிலேயே நின்றேன்.

நான் அவரிடம் மன்னிப்புக் கேட்கலாம் என்று முடிவெடுத்த போது, அவரே என்னை வகுப்பிற்குள் வந்து என் இருக்கையில் அமரச் சொன்னார். நான் வாயை அடைத்தவாறு அன்றைய தமிழ் வகுப்பில் அமர்ந்து இருந்தேன்! அன்று முழுவதும் என் மனம் பட்ட பாடு எனக்குத் தான் தெரியும்! ஆசிரியர் என்னை எப்போது வேண்டுமானாலும் கூப்பிட்டு திட்டப் போகிறார் என்று என் மனம் படபட என்று அடித்துக்கொண்டே இருந்தது! ஒரு வழியாகப் பாடமும் முடிந்தது! அப்போது நான் ஆசிரியரிடம் சென்று மௌனமாக நின்றேன். அவர் என்னைக் கண்டு என்ன வேண்டும் என்று கேட்டார்.

நான் நா தழுதழுக்க அவரிடம் நான் நடந்து கொண்ட விதத்திற்காக மன்னிப்புக் கேட்டு தலை குனிந்தவாறு நின்றிருந்தேன். அதற்கு அவர் புன்னகை சிந்தியவாறு, " இனி நீ அவ்வாறு செய்யக்கூடாது, அகிலா! அதிலும், அன்று நீ பள்ளிச் சீருடையை அணிந்திருந்தாய். நான் போது மக்களில் ஒருவராக இருந்திருந்தால் உன்னையும் நம் பள்ளியையும் மிகவும் தவறாக எண்ணி இருப்பேன் அல்லவா? இனியாவது நீ நல்ல சிறுவன் என்ற பெயரை எடுக்க முயற்சி செய், " என்று கணிவுடன் கூறி என் தோளில் தட்டிக் கொடுத்தார்.

பொறுத்தார் பூமி ஆழ்வார் என்ற பழமொழிக்குப் பொருள் எனக்கு அன்று தான் தெரிந்தது! என் ஆசிரியர் அவரது அன்பினாலேயே என்னையும் எனது தீய பண்புகளையும் மாற்றினார். இப்போதெல்லாம் என் பெற்றோரும் உறவினர்களும் மட்டுமல்லாது என் ஆசிரியர்களும் நண்பர்களும் கூட என்னிடம் காணப்படும் நற்குணத்தை மிகவும் மெச்சுகிறார்கள்!

No comments:

Post a Comment